சவுதி அரேபியாவில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் விவாகரத்து செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் கணவனும் மனைவியும் சவுதி அரேபியாவின் சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தனர். மனைவி, கணவரை முந்தி சென்று கொண்டே இருந்தார். ’பின்னால வா’ என்று பலமுறை எச்சரித்தார் கணவர். இருந்தும் நடையை எட்டிப் போட்டிருக்கிறார் மனைவி. சொன்ன பேச்சைக் கேட்காமல், தனக்கு முன்னே நடந்து சென்ற மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் அந்த கணவர். இவர்கள் பெயர்களைக் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டிருக்கிறது கல்ஃப் நியூஸ்.
இதே போல விருந்தில் ’மெயின் டிஷ்’ தயார் செய்யாததால் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் இன்னொருவர்.
தனது நண்பர்களுக்கு டின்னர் ஏற்பாடு செய்திருந்தார் கணவர். மெயின் டிஷ்-ஆக, ஆட்டுத் தலையை செய்ய சொல்லியிருந்தார். மனைவி அதை சமைக்க மறந்துவிட்டார். நண்பர்கள் முன்பு தன்னை அவமானப்படுத்திவிட்டதாக, மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் அவர்.
காலில் கொலுசு அணிந்ததற்காக, மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் இன்னொரு கணவர்.
திருமணம் முடிந்து ஹனிமூனுக்கு சென்றனர் கணவனும் மனைவியும். அப்போது மனைவியின் காலில் சத்தம் கேட்டிருக்கிறது. என்னவென்று பார்த்தால், கொலுசு. ஹனிமூனுக்கு எப்படி கொலுசு அணிந்து வரலாம்? என விவாகரத்து செய்திருக்கிறார் மனைவியை.
இதுபோன்ற அற்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் பழக்கம் கடந்த 2 வருடங்களாகத்தான் அதிகரித்திருக்கிறது என்கிறார், திருமணங்களை நடத்தி வைக்கும் ஹுமூத் அல் ஷிம்மாரி என்பவர். சமூக மரபுகளுக்கு எதிரான கருத்துகளும் நவீன டெக்னாலஜியுமே இப்படி நடப்பதற்கு காரணம் என்பது இவரது குற்றச்சாட்டு.