உலகம்
ஹஜ் புனித பயணத்துக்கு தடுப்பூசி செலுத்திய 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு
ஹஜ் புனித பயணத்துக்கு தடுப்பூசி செலுத்திய 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் அடுத்த மாத (ஜூலை) இறுதியில் தொடங்குகிறது. இந்த புனித பயணத்துக்கான அறிவிப்பை சவுதி அரேபிய அரசு நேற்று வெளியிட்டது.
அதன்படி இந்த ஆண்டு, தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் கொரோனாவின் முதல் அலை காரணமாக ஹஜ் புனித பயணம் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் வசித்து வந்த வெளிநாட்டினர் 1,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.