ரோஹிங்ய இஸ்லாமியர்கள் சென்ற படகு மூழ்கி 12 பேர் பலி
ரோஹிங்ய இஸ்லாமியர்கள் பயணித்த படகு வங்கதேசம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
மியான்மரில் நீடித்து வரும் வன்முறையை தொடர்ந்து அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்ய இஸ்லாமியர்கள் அகதிகளாக தப்பி வந்து வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் மியான்மரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளுடன் நாஃப் நதி வழியாக வங்கதேசம் புறப்பட்ட பயணிகள் படகு ஒன்று, பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த 40க்கும் மேற்பட்ட ஆண்கள் நீந்தி கரை சேர்ந்த நிலையில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விரைந்து சென்ற வங்கதேச படையினர் நீரில் மூழ்கிய பெண்களையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர். பலர் மாயமாகி இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.