ரஷ்யாவில் உள்நாட்டுப் போர்? உண்மையில் அங்கு நடப்பது என்ன? வாக்னர் குழுவின் பின்னணி என்ன?

ரஷ்ய அரசுக்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழுவினர் வன்முறையில் இறங்கியுள்ளதால் மாஸ்கோ உட்பட பல்வேறு மாகாணங்களில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யா
ரஷ்யா புதிய தலைமுறை

ரஷ்யாவில் நடப்பது என்ன?

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட தனியார் ராணுவ கூலிப்படையினர் எனக் கூறப்படும் வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்யாவில் தடை உள்ளது. எனினும், ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பக்முட் நகரைக் கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், தற்போது வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஷ்யாவுக்கு எதிராக அக்குழுவினர் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

ரஷ்யா
ரஷ்யாபுதிய தலைமுறை

இந்த நிலையில் ’ரஷ்ய ராணுவத் தலைமையை அழிப்போம் என்றும், எங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்வோம்’ என்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்ய ராணுவத்தைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதிக்குள் தங்கள் படைகள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எச்சரித்த வாக்னர் குழுத் தலைவர்

முன்னதாக அவர் வெளியிட்டிருந்த ஆடியோ ஒன்றில், “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார்.

மற்றொரு ஆடியோ ஒன்றில், “புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

யெவ்ஜெனி பிரிகோஸின்
யெவ்ஜெனி பிரிகோஸின் புதிய தலைமுறை

இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்குத் தூண்டுவதாக வாக்னர் தலைவர் பிரிகோஸினை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ள ரஷ்ய அரசு, சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதிலடி குறித்த ரஷ்ய அதிபர் புதின்!

இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசத்துரோகிகள் ஆவர். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்திவிட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டுப் போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்தச் சூழலில் தனி நபர்களின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் தேசத் துரோகமாகும்.

புதின்
புதின்புதிய தலைமுறை

ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைய கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இந்த உள்நாட்டுப் பிரச்னை புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

வாக்னர் குழு என்பது என்ன? அதன் பின்னணி யாது?

ரஷ்யாவிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர முயன்றது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்ட தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்களே வாக்னர் ஆயுதக் குழுவினர். சிரியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்பாட்டில் உள்ள இந்தக் குழு, போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுக்கும் ஆளானது.

2014இல் ரஷ்யா, கிரிமியாவை இணைத்தபோது வாக்னர் குழு முதலில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளைத் தங்களது குழுவில் வாக்னர் இணைத்துக் கொள்வதாகவும், 2022 நவம்பருக்கு முன்பு, ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 23,000க்கும் அதிகமாகக் குறைந்திருப்பதாகவும் தரவு ஒன்று கூறுவதாக பிரிட்டன் அதிகாரிகள் கடந்த 6 மாதத்திற்கு முன்பே குறிப்பிட்டுள்ளனர்.

தவிர, இந்தக் காலகட்டத்தில்தான் வாக்னர் குழு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் பல குற்றவாளிகள் வாக்னருடன் இணைந்ததாக நம்பப்படுகிறது. குழுவில் இணைந்து பணியாற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதோடு, ஆறு மாதங்கள் பணியாற்றிய பின்னர் அவர்களது தண்டனையும் குறைக்கப்படும் என்று அவர்களிடம் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளரான ஜான் கிர்பி, ”இந்தக் குழு இப்போது அதிகாரத்தில் உள்ள ரஷ்ய ராணுவத்திற்குப் போட்டியாக இருக்கும்” என கடந்த 6 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

யார் இந்த யெவ்ஜெனி பிரிகோஸின்?

இந்த வாக்னர் குழுத் தலைவராக இருப்பவர்தான் யெவ்ஜெனி பிரிகோஸின். இவர் குழுவிலான ராணுவ அமைப்பு, உக்ரைனில் பல பகுதிகளைச் சேதப்படுத்தியதிலும் கைப்பற்றியதிலும் தூணாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, யெவ்ஜெனி பிரிகோஸின் உலக நாடுகளின் கவனத்தை பெற்றார். இவர்தான் தற்போது ரஷ்ய அரசுக்கு எதிராக மாஸ்கோ கூலிப்படையை இணைத்துக்கொண்டு உள்நாட்டுப் போரைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது

இன்று ரஷ்ய அரசை அச்சுறுத்தி வரும் பிரிகோஸின், கடந்த 1961ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். 1981ஆம் ஆண்டு, கொள்ளை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த பிரிகோஸினுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அதிலிருந்து விடுதலையான அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உணவகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் அப்போது நகரின் துணை மேயராக இருந்த புதினின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். மேலும் புதினின் நட்பு வட்டத்தால் சமையல் வணிகத்தில் அவர், ரஷ்ய அரசாங்க ஒப்பந்தங்களை அதிகமாகப் பெற்றுள்ளார். இதனால், ’புதினின் சமையல்காரர்’ என்றும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறார்.

ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் தொடங்க காரணம் என்ன?

ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோதச் செயல்களை விளாடிமிர் புதின், வாக்னர் ஆயுதக் குழுவின் மூலம் மேற்கொண்டதாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் குற்றம்சாட்டின. இது ரஷ்யாவுக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. மேலும், உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷ்யா கைப்பற்றியது. ’இந்த நகரை நாங்களே கைப்பற்றினோம். வாக்னர் குழுவின் வெற்றியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பறிக்க நினைக்கின்றன’ என வாக்னர் யெவ்ஜெனி பிரிகோஸின் குற்றம்சாட்டினார்.

மேலும், ‘பக்முட் நகரைக் கைப்பற்றுவதற்கு வாக்னருக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்க ரஷ்ய ராணுவம் தவறிவிட்டது, ஒருகட்டத்தில் தங்களையே ரஷ்ய ராணுவம் தாக்கத் தொடங்கியது’ எனத் தெரிவித்த வாக்னர் குழு, ’உக்ரைனில் ஏற்பட்ட தோல்விகளுக்கு ரஷ்யாவின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள்தான் காரணம்’ எனவும் குற்றம்சாட்டியது. ரஷ்ய அரசுக்கும் வாக்னர் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட இதுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

வாக்னரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அக்குழுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதின் செயல்பட ஆரம்பித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. வாக்னரின் குழுவினர் ரஷ்ய ராணுவத்தால் தடுத்தும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வெகுண்ட அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்குத் தயாராகி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரம் காட்டியதாகவும், அது தற்போது வெடிக்கத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர், ரஷ்யாவின் தென்பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாகவும், அங்கிருந்து அவர்கள் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ரஷ்ய மக்கள், “இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஆங்காங்கே குண்டு சத்தம் மட்டும் கேட்கிறது. மக்கள் ஆங்காங்கே ஓடுகின்றனர். எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய விவகாரம் குறித்து உக்ரைன் அதிபர் பதிவு!

ரஷ்யாவில் தொடங்கியிருக்கும் உள்நாட்டுப் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ”அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கிfile image

உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்னை ரஷ்யாவிற்கு ஏற்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.

மாஸ்கோவைவிட்டு வெளியேறினாரா புதின்?

இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவைவிட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. புதின் சிறப்பு விமானம் மூலம் வடமேற்குத் திசையில் புறப்பட்டுச் சென்றதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், அந்தச் சிறப்பு விமானத்தில் புதின் பயணித்தாரா என்பதை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com