“இந்தியாவின் அறிவிப்பை கண்டிக்கிறோம்” - பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் 

“இந்தியாவின் அறிவிப்பை கண்டிக்கிறோம்” - பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் 
“இந்தியாவின் அறிவிப்பை கண்டிக்கிறோம்” - பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் 

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக பாகிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம், ''ஜம்மு -காஷ்மீர் மக்களாலும், பாகிஸ்தானாலும் இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா எடுக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் ஜம்மு -காஷ்மீரின் சர்ச்சைக்குரிய நிலையை மாற்ற முடியாது. சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குர்ஷி, ''ஜம்மு- காஷ்மீர் தொடர்பாக இந்தியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பாகிஸ்தான் கண்டிக்கிறது. பாகிஸ்தானுக்கு வருகை தரும் அமெரிக்க தூதுக்குழு மற்றும் சர்வதேச குழுக்களிடம் காஷ்மீர் தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம். காஷ்மீர் நிலைப்பாட்டிலும்,  காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ஆதரவு தெரிவிப்பதிலும் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com