வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்
வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயல்பட வேண்டாம் என இலங்கை மக்களை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினமான இன்று, கொழும்பு நகரில் உள்ள சில தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. அத்துடன் இரண்டு ஓட்டல்கள், குடியிருப்புப் பகுதி என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் தொடர்புத்துறை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தமது பூரண ஒத்துழைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அனைவரின் ஒத்துழைப்பே மிக முக்கியமாக தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். அனைவரும் அமைதி காக்கும் அதே வேளை, வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயல்பட வேண்டாம் என்றும் மக்களை மைத்ரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், நடந்த சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.