இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ட்ரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில்நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபிறகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அமெரிக்காவை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளுக்குக் கண்டனம் தெரிவித்தார். யூத மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் கன்சாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்த ட்ரம்ப், வெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களை அனுமதிக்க முடியாது என்றார். குடிமக்களின் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க தனிக்குழு அமைக்க நீதித்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ட்ர்மப் பேசினார். போதைபொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது உறுதி என்றும் ட்ரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.