விமானி செய்த தவறு காரணமாக, ஆம்ஸ்டர்டம் விமான நிலையத்தில், விமானத்தை ராணுவ போலீசார் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்ஸ்டம் நகரில் உள்ள ஷிபோல் (schiphol) விமான நிலையம். இங்கிருந்து மான்ட்ரிட் (Mandrid) நகருக்கு ஸ்பானிஷின் ஏர் யூரோபா என்ற விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தின் உள்ளே பயணிகள் ஏறி இருந்தனர். அப்போது விமானி தவறுதலாக, விமான கடத்தல் தொடர்பை தெரிவிக்கும் அபாய ஒலியை அழுத்திவிட்டார். இதனால் விமான நிலையம் பரபரப்பானது.
விமானம் கடத்தப்பட இருப்பதாக நினைத்து, டச்சு ராயல் ராணுவ போலீசார் ஆயுதங்களுடன் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. சில மணி நேரத்துக்குப் பிறகு விமானி செய்த தவறால் விமான கடத்தல் அபாய ஒலி எழுப்பப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசாரும் தீயணைப்பு வாகனங்களும் அங்கிருந்து சென்றன. இந்தப் பரபரப்பு காரணமாக விமானங்கள் புறப்படும் அட்டவணை பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
’நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.