பின்சீட்டில் சமத்தாக அமர்ந்துகொண்ட ஆந்தை: வைரலாகும் புகைப்படம்!
இங்கிலாந்திலுள்ள ஹாம்ப்சைர் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் பறக்க முடியாமல் தவித்த ஆந்தையை சிகிச்சைக்காக தனது காரில் அழைத்து செல்லும் புகைப்படம்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
விலங்குகள், பறவைகள் பற்றிய செய்திகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. அதுபோல ஹாம்ப்சைர் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் ஆந்தையை தனது காரின் பின்சீட்டில் அமரவைத்துள்ள புகைப்படமும், சீட்டில் பவ்யமாக அமர்ந்துள்ள ஆந்தையின் படமும் அனைவரையும் சிலிர்ப்படைய வைத்துள்ளது
“அந்த காவலர் பணியில் இருந்தபோது ஒரு குகைக்கு அருகே பறக்கமுடியாத நிலையில் இருந்த ஆந்தையை பார்த்துள்ளார். உடனே அந்த ஆந்தையை மீட்டு விங்க்ஸ் ஆப் டான் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றார். லக்கி என்று பெயரிடப்பட்ட அந்த ஆந்தைக்கு தலையில் காயம்பட்டுள்ளதால் இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குணமடைந்த பிறகு விரைவில் இந்த ஆந்தை வானில் பறக்கும்” என்று ஹாம்ப்சைர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஹாம்ப்சைர் மாநில காவல்துறை வெளியிட்ட இந்த படங்களுக்கு பலரும் சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.