சவப்பெட்டியில் இறுதிச் சடங்கு செய்யும்போது கண்விழித்த பெண்! பதறிப்போன உறவினர்கள்!

சவப்பெட்டியில் இறுதிச் சடங்கு செய்யும்போது கண்விழித்த பெண்! பதறிப்போன உறவினர்கள்!
சவப்பெட்டியில் இறுதிச் சடங்கு செய்யும்போது கண்விழித்த பெண்! பதறிப்போன உறவினர்கள்!

பெரு நாட்டில் விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்ணை சவப்பெட்டியில் வைத்து இறுதிச் சடங்குகள் செய்யும்போது அவர் கண்விழித்து பெட்டியை உதைத்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெரு நாட்டின் லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் 36 வயதான ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா. இவர் கடந்த 26-ம் தேதி காரில் உறவினர்களுடன் பயணம் செய்யும்போது அந்த கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. காரில் பயணித்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரோசா மற்றும் அவரது உறவினர் என இருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ரோசாவை அடக்கம் செய்வதற்கான வேலைகளை அவரது உறவினர்கள் செய்தனர். ரோசாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டுவந்தனர். அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியை திறந்தபோது ரோசா திடீரென கண் விழித்துள்ளார். மேலும் அந்த சவப்பெட்டியை ரோசா உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் செய்வதறியாது திகைத்துப் போயினர்.

இதனை தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சவப்பெட்டியோடு ரோசாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சில மணிநேரத்திற்கு பின் ரோசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் விபத்தின்போது ரோசாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்தில் ரோசா மற்றும் அவரது உறவினர் என இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளது. ஆனால், விபத்தில் படுகாயமடைந்த ரோசா கோமா நிலையில் இருந்துள்ளார். கோமா நிலையில் இருந்த ரோசாவை சரியாக பரிசோதனை செய்யாமல் உயிரிழந்துவிட்டார் என 2வது முறை அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலேயே ரோசா கோமா நிலையில் இருந்ததை கண்டறிந்து அவருக்கு போதிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை உயிர் பிழைக்க வைத்திருக்கலாம் என உறவினர்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர். அவர் சவப்பெட்டியை உதைக்கும் வீடியோக்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com