செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா - ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா - ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்
செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா - ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்

உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா முழுவதும் தற்போது உச்சரிக்கப்படும் வார்த்தை ஆக்சிஜன். உயிர் காக்கும் ஆக்சிஜனுக்காக நாம் பூமியில் ஓடிக் கொண்டிருக்கையில் செவ்வாய்கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது நாசா.

செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் கனவுத் திட்டம் எட்டி விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்பதற்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வு நடந்திருக்கிறது. செவ்வாய்கிரகத்தில் ஆக்சிஜன் இல்லை. 96 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடுதான் இருக்கிறது. இந்த சூழலில் மனிதன் அங்கு சென்றால் ஆக்சிஜனை உருவாக்கி சுவாசிக்க வைக்க இயலுமா என்ற கேள்வி எழும்? இதற்கு ஆம் என பதில் அளித்திருக்கிறது நாசா. மனிதர்களை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யமுடியுமா? என்ற கேள்விக்கு விடை காண நாசா அனுப்பிய Perseverance ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரையிறங்கியது.

அன்று முதல் தனது பணியை செவ்வனே செய்து வரும் இந்த 6 சக்கர ரோபோ, செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி இருக்கிறது. இதற்காக MOXIE என பெயரிடப்பட்ட கருவியை ரோவருடன் இணைத்து அனுப்பியுள்ளனர். கார் பேட்டரி அளவுள்ள இந்த பெட்டி ரோவரின் முன்பகுதியில் அமைந்துள்ளது. இது கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரித்து ஆக்சிஜனை உருவாக்கும் திறன் கொண்டது. முதல்கட்ட சோதனையில் 5 கிராம் ஆக்சிஜனை இது உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்களுக்கு சுவாசிக்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் MOXIE வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை விண்வெளி வீரர்கள் பயன்படுத்த முடியும் என்பதோடு ரோவர் பூமிக்கு திரும்பும் போது உந்துசக்தியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் சத்தமில்லாமல் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது நாசா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com