மெக்சிகோ நகருக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற தியோதிஹுவாகன் தொல்பொருள் தளத்தில் பறந்து கொண்டிருந்த வெப்பக் காற்று பலூனில் (hot air balloon), திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக இறந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏர் பலூன் மேலே கிளம்பிய போது, கொஞ்ச நேரத்தில் திடீரென எதிர்பாராதவிதமாக அதில் தீப்பிடித்துள்ளது. இதனால் அதில் இருந்தவர்கள் அடுத்து என்ன செய்வதென அறியாமல் குழம்பியுள்ளனர்.
ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல் அச்சத்தில் பலூனில் இருந்து இருவர் மட்டும் கீழே குதித்துள்ளனர். இதில் அந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர். அதன்படி 39 வயது பெண் மற்றும் 50 வயது ஆண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பலூனிலிருந்த மற்றொரு சிறுவன் கடுமையான தீக்காயத்துடன் உயிர் பிழைத்துள்ளார்.
அந்தச் சிறுவனின் முகத்தில் இரண்டாம் நிலை தீக்காயங்களும், வலது தொடை எலும்பில் முறிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மூவரின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும், பலூனில் வேறு பயணிகள் யாரும் இருந்தார்களா என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த விபத்து நடந்த தியோதிஹுவாகன், மெக்சிகோ நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோ நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தியோதிஹுவாகனில் பல சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற ஹாட் ஏர் பலூன் சேவைகளை வழங்குகிறார்கள். அதுபோன்ற ஒன்றில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.