இம்ரான் கான் பேச்சை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு தடை.. பாக். அரசின் உத்தரவின் பின்னணி என்ன?

இம்ரான் கான் பேச்சை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு தடை.. பாக். அரசின் உத்தரவின் பின்னணி என்ன?
இம்ரான் கான் பேச்சை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு தடை.. பாக். அரசின் உத்தரவின் பின்னணி என்ன?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு, பேட்டி உள்ளிட்டவற்றை ஒளிபரப்ப அந்நாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கு தகவல் தொலைதொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, அந்நாட்டின் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் உள்ளார். அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சி சரிந்து வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் அவ்வப்போது தன் ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போராட்டங்களை பாகிஸ்தான் அரசு ஒடுக்கி வருகிறது.

இதற்கிடையே லாகூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், “தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்கு முன்னாள் ராணுவ ஜெனரல் பாஜ்வாவும், கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தன்னைக் கொலை செய்ய நினைத்ததன் பின்னணியில் இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுமே காரணம்” எனக் குற்றஞ்சாட்டினார்.

அவரது பேச்சு நாடு முழுவதும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் நேரடியாக ஒளிபரப்பானது. இதற்கிடையே பிரதமருக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பொருட்களை விற்ற வழக்கில், இம்ரான் கானை, கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று போலீசார், அவரைக் கைது செய்யச் சென்றபோது இம்ரான் கான் அங்கிருந்து தலைமறைவானார் என செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இம்ரான்கானின் பேச்சு, பேட்டி உள்ளிட்டவற்றை ஒளிபரப்ப பாகிஸ்தான் செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டு தகவல் தொலைதொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெறுப்பை தூண்டும் வகையில் இம்ரான்கான் பேசி வருவதாகவும் அவரது பேச்சு, பேட்டியை ஒளிபரப்பக் கூடாது என்று பாகிஸ்தான் தகவல் தொலைதொடர்புத் துறை அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு அமலான 2 மணி நேரத்தில் பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனமான எஆர்ஒய் செய்தி நிறுவனம், லாகூரில் இம்ரான்கான் பேசியதை ஒளிபரப்பு செய்தது. தடையை மீறி இம்ரான்கான் பேச்சை ஒளிபரப்பு செய்ததால் அந்த செய்தி நிறுவனத்தின் உரிமத்தை பாகிஸ்தான் தகவல் தொலைதொடர்புத் துறை ரத்து செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com