பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் போரை தொடங்காது - இம்ரான்கான்
பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் போரை தொடங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சட்டப் பேரவை உடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா தரப்பில் பதில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்து சென்றது. எனினும் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.
இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கருத்து தெரிவித்தன. இந்தியா - பாக்., இடையே பதற்றமான நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் போரை தொடங்காது என பாக்., பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
லாகூரில் சீக்கிய இன மக்கள் மத்தியில் பேசிய அவர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுதங்கள் உள்ள நாடுகள் என்றும், இவ்விரண்டு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்தால் உலகமே அபாயத்தை எதிர்க்கொள்ளும் என கூறினார். எந்த பிரச்னைக்கும் யுத்தம் ஒரு தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டார். போரில் வெற்றி பெற்றவரே தோல்வியடைந்தவருமாவார் என்று தெரிவித்த இம்ரான் கான், போர் பல புதிய பிரச்னைகளுக்கு காரணமாக அமையும் எனத் தெரிவித்தார்.

