“நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்திக் கொள்ளலாம்” - பாகிஸ்தான் சம்மதம்

“நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்திக் கொள்ளலாம்” - பாகிஸ்தான் சம்மதம்
“நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்திக் கொள்ளலாம்” - பாகிஸ்தான் சம்மதம்

தங்கள் நாட்டிற்கு வரும் நீரை தடுத்து நிறுத்துவது என்ற இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தாக்குதல் நடந்த உடனே பாகிஸ்தானுக்கு வழங்கி இருந்த வர்த்தக ரீதியில் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. பின்னர், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் ஆற்று நீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று தெரிவித்திருந்தார்., “கிழக்குப் பகுதி ஆறுகளான ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நமது பங்கு உபரி நீரை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல், அந்த நீரை காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு கிடைக்கும் வகையில் திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தனது ட்விட்டரில் கட்கரி கூறியிருந்தார். 

இந்நிலையில், தங்கள் நாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நீரை தடுத்து நிறுத்தும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் கவாஜா சுமாயில், “கிழக்குப் பகுதி நதிகளிலிருந்து வரும் நீரை இந்தியா தங்களது பயன்பாட்டிற்கு திருப்பி கொண்டால் அதுகுறித்து கவலைப்படவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ போவதில்லை. ஏனெனில் இருநாடுகளுக்கு இடையிலான இந்தோ நதிநீர் ஒப்பந்தம் இந்தியா இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், “இந்தியா ரவி ஆற்றின் குறுக்கே ஷக்புர் கண்டி அணை கட்ட இந்தியா விரும்புகிறது. இந்தத் திட்டம் 1995இல் கைவிடப்பட்ட ஒன்று. தற்போது, தங்களுக்கு பயன்படாமல் உபரியாகி பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நீரை இந்தியா தனது சொந்த தேவைக்கு பயன்படுத்த விரும்புகிறது” என்றார் பாகிஸ்தான் செயலாளர். 

இருப்பினும், “எங்கள் நாட்டிற்கு பயன்படுத்த உரிமை உள்ள மேற்குபகுதி ஆறுகளான செனப், சிந்து, ஜீலம் ஆகியவற்றிலிருந்து வரும் நீரை இந்தியா பயன்படுத்தினாலோ அல்லது திருப்பி விட்டாலோ, கவலை தெரிவிக்கும். எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம்” என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com