விமானப்படை தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை யுனிசெஃப்-ன் நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து விலகும் படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதராக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இருக்கிறார். இவர், புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை வீரர்கள் கொடுத்த பதிலடிக்கு தனது ட்விட்டரில் ‘Jai Hind #IndianArmedForces” என பதிவிட்டிருந்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதலின் போது நடுநிலையாக செயல்படாமல் ஒருதலைபட்சமாக அவர் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக ஆன்லைனில் கையெழுத்து இயக்கப் போராட்டத்தை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
அத்துடன் அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, பிரியங்கா மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலரும் விமானப்படை தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

