ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு கடந்த 2017-இல் மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான் நாட்டு ராணுவ நீதிமன்றம். இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (51), உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாகவும் கூறி, பலுசிஸ்தான் பகுதியில் கடந்த 2016-இல் கைது செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. தொடர்ந்து 2017-இல் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் அவருக்காக வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டது. மேலும் அவருக்கு தூதரக அணுகலை வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.
சர்வதேச நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்தின் அடிப்படையில் தற்போது பாகிஸ்தான் அரசு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் உரிமையை குல்பூஷனுக்கு வழங்கியுள்ளது.