”அரசியலில் இறங்கி தேர்தலில் போட்டியிட முடியுமா?” ராணுவ ஜெனரலுக்கு சவால்விட்ட எம்பி.. பரபரப்பில் PAK!
பாகிஸ்தானின் ராணுவ ஜெனரலான அசீம் முனீருக்கு அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (JUI-F) கட்சியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் சவால் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டாட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். ராணுவத்தின் அதிகாரமிக்க தலைவராக அசீம் முனீர் உள்ளார். பாகிஸ்தானின் அரசியல் மற்றும் அனைத்து அரசு நடவடிக்கைகளிலும் இவரது தலையீடு இருப்பதாகவும், அந்நாட்டின் அரசியலில் அடுத்த வலுவான தலைவராக இவர் உருவெடுப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், பாகிஸ்தானில் கடந்த 2024 பொதுத்தேர்தலுக்குப் பிறகு அமைந்துள்ள ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, ராணுவத்தின் முழு ஆதரவிலேயே இயங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, ராணுவ தளபதி ஆசிம் முனீர் பாதுகாப்பு விவகாரங்களைத் தாண்டி நாட்டின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் குழுக்கள் மற்றும் சிவில் கமிட்டிகளிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். இதையடுத்து அசீம் முனீர் பற்றிய நடவடிக்கைகள் உலக அளவில் பேசுபொருளாகி வருகின்றன.
இந்த நிலையில்தான், பாகிஸ்தானின் மூத்த அரசியல்வாதியும், ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (JUI-F) கட்சியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் (Maulana Fazlur Rehman), அந்நாட்டின் ஆசிம் முனீருக்கு சவால் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், பாகிஸ்தான் ராணுவம் நாட்டின் சிவில் நிர்வாகத்திலும் அரசியலிலும் அளவுக்கு அதிகமாக தலையிடுவதாகக் கூறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், “பாகிஸ்தானில் யார் ஆட்சி அமைக்க வேண்டும், யாருடைய ஆட்சியைப் பறிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ராணுவத்தின் வேலை அல்ல. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ராணுவ வீரர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகப் போராட சாதாரண குடிமக்களை ஆயுதம் ஏந்துமாறு அரசு மற்றும் ராணுவம் கூறுவது எந்த விதத்தில் நியாயம்” எனக் கேள்வி எழுப்பிய அவர், அசீம் முனீரையும் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து அவர், “உங்களுக்கு (அசீம் முனீர்) அரசியல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால், முதலில் உங்களது ராணுவ சீருடையைக் கழற்றி வையுங்கள். ராணுவப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி நேரடியாகத் தேர்தலில் போட்டியிடுங்கள். அப்போதுதான் சீருடை அணிந்த ஒருவருக்கு மக்கள் எவ்வளவு வாக்குகள் செலுத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்க முடியும்" எனச் சவால் விடுத்தார். மேலும் அவர், “பாகிஸ்தான் ராணுவத்தின் தவறான கொள்கைகளால் பலுசிஸ்தான் மாகாணத்தின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கு ராணுவத்தின் பிடி நழுவி வருகிறது” என்று குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தான் ராணுவ ஜெனரலுக்கு அந்நாட்டைச் சேர்ந்த எம்பி ஒருவர் சவால் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

