தொடரும் பதற்றம் | பாக் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முகமது ஆசிம் மாலிக் நியமனம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. மேலும் இருநாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முகமது ஆசிம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக இருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அவரது பணிக்காலத்தில், பலுசிஸ்தான் மற்றும் தெற்கு வஜீரிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள பிரிவுகளுக்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நடத்திய போராட்டங்களும் துணைத் தளபதியாக அவர் பதவி வகித்த காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.