450 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை.. வெற்றிகரமாக பரிசோதித்த பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், 450 கி.மீ. தூரம்வரை சென்று தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்திருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, பயிற்சி INDUSஇன் ஒரு பகுதியாக ஏவப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தரையில் இருந்து தரைக்கு பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையான இது, பாகிஸ்தானால் சோன்மியானி ரேஞ்சில் சோதிக்கப்பட்டது. மேலும், இது 'எக்சர்சைஸ் சிந்து' என்ற இராணுவப் பயிற்சியின் கீழ் சோதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் செய்தி தொடர்பு பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணுவத்தின் போர் தயார்நிலையை உறுதி செய்வதும், ஏவுகணையின் நவீன தொழில்நுட்ப அமைப்பை சரிபார்ப்பதும் இந்த ஏவுகணை சோதனையின் நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளது.