மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹஃபீஸ் சையத். இவர் பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பிற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். அத்துடன் பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் மீது பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் லாகூர்,முல்தான் மற்றும் குஜ்ரான்வாலா ஆகிய பகுதிகளில் மொத்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு மீது பயங்கரவாத செயல்களுக்கான நிதி பரிமாற்றத்தை தடுக்க உலக நாடுகள் பல வலியுறுத்தி வந்தனர். அத்துடன் எஃப்.ஏ.டி.எஃப் (FATF) அமைப்பும் பாகிஸ்தான் அரசு பயங்கரவாத செயல்களுக்கு பரவும் நிதிகளை கட்டுப்படுத்த கெடு விதித்திருந்தது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.