எதிர்காலத்தில் இந்தியாவுடன் போர்.. அணு ஆயுதத்துடன் மிரட்டிய பாகி. ராணுவத் தளபதி!
இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம், அதேநேரத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் சமீபகாலமாக அதீத நெருக்கம் காட்டி வருகிறது. தவிர, பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் தொடர்பாகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் 18ஆம் தேதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், அதிபர் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அழைக்கப்பட்டார். அவர்களுடைய இந்தச் சந்திப்பு உலகம் பேசுபொருளானது. மேலும், இந்தப் பயணத்தின்போது அசிம் முனீர், அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளும் அமைதி முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.
இந்த நிலையில், அவர் தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புளோரிடாவிற்குச் சென்றுள்ளார். புளோரிடாவில் உள்ள டம்பாவின் கௌரவ தூதராகப் பணியாற்றும் தொழிலதிபர் அட்னான் ஆசாத், முனீருக்காக இரவு உணவு விருந்தளித்தார். புளோரிடாவை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 120 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் செல்போன்கள் அல்லது பிற டிஜிட்டல் சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதியும் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த விருந்து நிகழ்வின்போது, அணு ஆயுதப் போர் குறித்து பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் வெளிப்படையாக எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அவர், “சிந்து நதி நீர் வழித்தடங்களில் இந்தியா கட்டும் எந்தவொரு உள்கட்டமைப்பையும் பாகிஸ்தான் அழிக்கும். இந்தியா ஓர் அணை கட்டும் வரை நாங்கள் காத்திருப்போம். அது அவ்வாறு செய்யும்போது, 10 ஏவுகணைகளைப் பயன்படுத்தி அதை அழிப்போம். எங்களுக்கு ஏவுகணைகளுக்குப் பஞ்சமில்லை. நாங்கள் ஓர் அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால், பாதி உலகத்தையும் எங்களுடன் வீழ்த்துவோம். சிந்து நதி இந்தியர்களின் குடும்பச் சொத்து அல்ல. இது, பாகிஸ்தானுக்கு நீர் ஓட்டத்தைத் தடுக்கக்கூடும். ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க இந்தியா எடுத்த முடிவு 250 மில்லியன் மக்களை பட்டினியால் வாடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று அப்போது முனீர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர், "இந்தியா ஒளிர்கிறது, ஒரு மெர்சிடிஸ் ஒரு ஃபெராரி போன்ற நெடுஞ்சாலையில் வருகிறது, ஆனால் நாம் சரளைக்கற்களால் நிறைந்த ஒரு குப்பை லாரி. லாரி காரை மோதினால், யார் தோல்வியடைவார்கள். இந்தியாவின் கிழக்கிலிருந்து நாம் தொடங்குவோம். அங்கு அவர்கள் மிகவும் மதிப்புமிக்க வளங்களை வைத்திருக்கிறார்கள். பின்னர் மேற்கு நோக்கி நகர்வோம்” எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இராணுவத் தலைவருக்கு இருந்திருக்கலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் அரசியலில் இராணுவ ஈடுபாட்டை நியாயப்படுத்த முனீர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே உறவு விரிசல் பெற்றது. இதன் காரணமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.