மருமகள் மீது பாலியல் வன்முறை நடத்திய கணவனை சுட்டுக்கொன்ற மனைவி
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் மருமகளை மிரட்டி பாலியல் வன்முறை நிகழ்த்திய கணவனை, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது மனைவியே சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
பெஷாவர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குல்பர் கான், பேகம் பீபி வசித்துவந்தனர். அவர்களின் மகன் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். புதிதாக திருமணமான அவரின் மனைவி, குல்பர் கான் மற்றும் பேகம் பீபியுடன் வசித்து வந்துள்ளார். பெற்றோருடன் தனது மனைவியை விட்டுவிட்டு அவர் கடமையாற்ற சென்றுவிட்ட நிலையில் வீட்டில் இருந்த அவரது இளம் மனைவியை தனது தந்தை குல்பர் கான் என்பவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை நடத்திய செய்தி அவருக்கு பின்னர் தெரியவந்தது. இதைக்கேட்டு மனம் நொந்துப்போன அந்த ராணுவ வீரர், இந்த அக்கிரமத்தை தனது தாயார் பேகம் பீபியிடம் தெரிவித்தார்.
பெற்ற தந்தை என்பதால் அவரை தண்டிக்க எனது மனம் விரும்பவில்லை. இந்த முறை நான் பயிற்சிக்கு சென்றுவிட்டு விடுமுறையில் வரும்போது, நானும் எனது மனைவியும் வேறொரு வீட்டில் தனிக்குடித்தனம் போக தீர்மானித்துள்ளோம் என அவர் தாயாரிடம் கூறினார். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மாமனாரின் அத்துமீறல் அதிகரிக்கவே, பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுதொடர்பாக தனது மாமியாரிடம் முறையிட்டு அழுதுள்ளார். மனைவியின் பேச்சை பொருட்படுத்தாத குல்பர் கான், தொடர்ந்து அதேபோல் நடந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு போலீசாரிடம் சரணடைந்தார். குடும்ப உறவுகளையும், பந்தங்களையும் மதிக்க தெரியாததால் எனது கணவரை நான் சுட்டுக் கொன்றேன் என போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். பேகம் பீபியை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பெஷாவர் போலீசார், நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைத்தனர்.