நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி மட்டுமே! 6வது முறை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க!

நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி மட்டுமே! 6வது முறை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க!
நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி மட்டுமே! 6வது முறை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பதவியேற்கிறார்.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தீவிரம் காட்டி வருகிறார். புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அதனை தவிர்த்தார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசினார். பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியானது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளை பதவியேற்கக்கூடும் என இலங்கை அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் பெரும்பாலானோர் விக்கிரசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை 6.30க்கு பதவியேற்கிறார். அதனை தொடர்ந்து 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நாளை காலை பதவியேற்கிறது. இலங்கை பிரதமராக ஏற்கனவே 5 முறை பதவி வகித்துள்ளார் ரணில் விக்ரமசிங்க. இது குறித்த விவரங்களை ஐக்கிய தேசிய கட்சியின் சுப்பையா ஆனந்தகுமார் புதிய தலைமுறைக்கு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில் மாலையில் புதிய பிரதமர் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கை பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தயார் என கூறி இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு சஜித் பிரேமதாசா கடிதம் எழுதியுள்ளார். குறுகிய காலத்திற்குள் பதவி விலக அதிபர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட 4 நிபந்தனைகளுடன் சஜித் பிரேமதாசா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பதில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று உள்ளது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி மட்டுமே உள்ளார். அந்த ஒரு எம்பி ரணில் விக்கிரமசிங்க. இருந்தபோதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB)) மற்றும் பல கட்சிகளின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையைக் காட்ட தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதால் இன்று மாலை அவர் பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com