சூடானில் ஊட்டச்சத்து இல்லாமல் எலும்பும் தோலுமாக காட்சி தரும் 5 சிங்கங்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, உலகம் முழுவதும் இருந்து இணையதளவாசிகள் கண்ணீருடன் குரல்கள் கொடுத்து வருகின்றனர்.
சூடான் தலைநகரான கார்டூமில் உள்ளது அல் குரேஷி உயிரியல் பூங்கா. அங்கு பராமரிக்கப்பட்டு வரும் 5 சிங்கங்கள் எலும்பும் தோலுமாக, மிகவும் மோசமான நிலையில் தோற்றமளிக்கின்றன. சிங்கங்கள் என்பதற்கான அடையாளமே இல்லாமல் சாவின் விளிம்பில் அவை உள்ளன. வழக்கமாக சிங்கங்களைப் பார்த்து பிரமிக்கும் பார்வையாளர்கள், அல் குரேஷி பூங்காவில் உள்ள சிங்கங்களைப் பார்த்து வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர்.
போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்படாததே சிங்கங்களின் இந்த அவலநிலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஊட்டத்துள்ள உணவுகள் வழங்கப்படவில்லை என உயிரியல் பூங்காவை பராமரிக்கும் கார்டூம் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், 5 சிங்கங்களை உயிருடன் காக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகம் முழுவதும் வலுத்துள்ளது. Save Animal rescue என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.