வடகொரிய அதிபர் ஒரு முட்டாள்: பிலிப்பைன்ஸ் அதிபர் காட்டம்
வடகொரிய அதிபர் கிம்ஜோங்உன் ஒரு முட்டாள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே கூறியுள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள் கடும் விமர்சனத்தைச் சந்தித்து வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை வடகொரியா நடத்தியது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, கிம் ஜோங் உன் ஒரு முட்டாள் என்றும் அபாயகரமான பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். கிம் ஒருவேளை அந்தத் தவறைச் செய்து விட்டால் தூரக்கிழக்கு முழுவதும் பாலைவனமாகி விடும். இந்த அணு ஆயுதப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று ரோட்ரிகோ கடுமையாகப் பேசியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் தலைவராக இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்தவாரம் கொரிய தீபகற்பப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். அந்தக் கூட்டத்தில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா, வடகொரியா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 27 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ரோட்ரிகோ வடகொரிய அதிபரை கடுமையாக விமர்சித்துள்ளார்.