வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவதை தடுக்க வலுவான பொருளாதார தடைகளை உலக நாடுகள் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை எதிர்த்து, தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. வடகொரியா இன்று காலை வடமேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியது.
வடகொரியாவின் இந்த சோதனையை ஆத்திரமூட்டும் செயல் என விமர்சித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் கூறியதாவது, வடகொரியாவிற்கு எதிராக வலுவான பொருளாதார தடைகளை உலக நாடுகள் கொண்டுவர வேண்டும். தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வடகொரியாவின் செயலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. வடகொரியாவினால் அப்பகுதியில் நீண்ட கால அச்சுறுத்தல் நிலவி வருகின்றது என்று தெரிவித்தார்.