அணு ஆயுதத்தை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நடத்தப் போவதாக வெளியிட்ட அறிவிப்பை உலக நாடுகள் வெறும் வார்த்தையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நியூயார்க்கில் கடந்த மாதம் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவை முற்றிலும் அழித்துவிடப் போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்த வடகொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோ, பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது எச்சரிக்கையை வெறும் வார்த்தையாக உலக நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என வடகொரியா அரசின் மூத்த உயரதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் எண்ணத்தை அறிந்த ரியோங் ஹோ, நிச்சயம் சொன்னதை செய்து காட்டுவார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் எழுந்துள்ளது.