சீன சிறையில் அடைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்றவரான லியூவை புற்றுநோய் பாதிப்பு காரணமாக மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருபவர் லியூ ஜியாவோபோ. இவரை 2009-ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்க முயற்சி செய்ததற்காக சீன அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கு அடுத்த ஆண்டே உலக அமைதிக்கான நோபல் பரிசை நார்வே அரசு வழங்கியது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் பரிந்துரையின் பேரில் லியூவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாகவும், அமெரிக்க அரசுடன் லியூவுக்கு ரகசிய தொடர்பிருப்பதாகவும் சீன அரசு குற்றஞ்சாட்டியது. இதனைத்தொடர்ந்து நோபல் பரிசு பெறுவதற்கு நார்வே செல்ல அவருக்கு சீன அரசு அனுமதி மறுத்தது. மேலும் அவரின் மனைவி ஜியாவையும் சீன அரசு வீட்டுக்காவலில் அடைத்தது. இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த லியூ உடல் நலக்குறைவால் சென்யாங் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முற்றிய நிலையில் கல்லீரல் புற்றுநோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சீன அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் லியூவை பரோலில் விடுதலை செய்வதாக நேற்று அறிவித்தது. சென்யாங் நகர மருத்துவமனையில் லியூவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.