ஜப்பான் புதிய மன்னராக அரியணையில் அமர்ந்தார் நருஹிட்டோ
ஜப்பான் மன்னராக இருந்த அகிஹிட்டோ கடந்த மே மாதம் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் பாரம்பரிய முறைப்படி அகிஹிட்டோவிடம் இருந்த பொறுப்புகள் மகன் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து 126 ஆவது பேரரசராக நருஹிட்டோ அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் டோக்கியோவில் நருஹிட்டோவுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் உட்பட 180 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்களை ஜப்பான் பிரதமர் அபே வரவேற்றார்.
முடிசூட்டு விழாவில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நருஹிட்டோவுக்கு, கொட்டும் மழையில் குடைப்பிடித்தப்படி நின்ற பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பாரம்பரிய உடை அணிந்துவந்த நருஹிட்டோவுக்கு, பாரிம்பரிய முறைப்படி முடிசூட்டப்பட்டது.
இதையடுத்து நருஹிட்டோ 6.5 மீட்டர் உயரமுள்ள அரியணையில் அமர்ந்தார். மன்னராக பொறுப்பேற்ற நருஹிட்டோவுக்கு அரச மரியாதை செலுத்தும் விதமாக குண்டுகள் முழங்கப்பட்டன. அரியணை ஏறிய மன்னர், அரசியலைமைப்பின் படி செயல்படுவேன் என்றும், மக்களின் ஒற்றுமைக்கு அயராது பாடுபடுவேன் என்றும் உறுதிமொழி ஏற்றார்.
இதையடுத்து அவரது மனைவி மசாகோவுக்கு பேரரசி அந்தஸ்து வழங்கப்பட்டது. முடிச்சூட்டப்பட்ட மன்னருக்கு வாழ்த்துரை வழங்கிய ஜப்பான் பிரதமர் அபே, இரு கைகளையும் உயர்த்தி பன்சாய் என கோஷமிட்டார். அவருடன் இணைந்து பிற அதிகாரிகள் முழக்கமிட்டனர். பன்சாய் என்பதற்கு ஜப்பானிய மொழியில் பேரரசர் நீண்ட காலம் நலமுடன் வாழவேண்டும் என்பது பொருளாகும்.