ரஷ்யாவில் பறவை மோதி தடுமாறிய விமானத்தை சாதுர்யமாக தரையிறக்கி 233 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு ரஷ்ய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் 233 பயணிகளை ஏற்றிக் கொண்டு யுரால் ஏர்பஸ் 312 விமானம் கிரீமியாவிற்கு செல்ல புறப்பட்டது. விமானம் தனது ஓடு பாதையிலிருந்து பறக்க ஆரம்பித்த 5 விநாடிகளில் பறவை கூட்டம் ஒன்று வந்து விமானத்தின் எஞ்சின் மீது மோதியது. இதனையடுத்து விமானத்தில் கீழ் பகுதியில் லேசான தீ ஏற்பட்டது. அத்துடன் விமானம் ஆடத் தொடங்கியது.
இந்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி லாவகமாக விமானத்தைக் கையாண்டு அருகிலிருந்த சோளக்காடு ஒன்றில் தரையிறக்கினார். இதனையடுத்து விமானத்தில் பயணம் செய்த 233 பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். எனினும் இந்தச் சிறிய விபத்தில் 15க்கும் மேற்பட்டவர்கள் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றனர். இக்கட்டான சூழ்நிலையில் விவேகத்துடன் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி டேமிர் யுசுபோவிற்கு ரஷ்ய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.