இங்கிலாந்து ராணியைவிட சொத்து அதிகம்... 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி மகளால் வந்த சிக்கல்!

இங்கிலாந்து ராணியைவிட சொத்து அதிகம்... 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி மகளால் வந்த சிக்கல்!
இங்கிலாந்து ராணியைவிட சொத்து அதிகம்... 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி மகளால் வந்த சிக்கல்!

'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பால் திடீர் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, அக்‌ஷதா மூர்த்தியின் கணவரும், அமைச்சரவையில் பொறுப்பு வகிப்பவருமான ரிஷிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் அமைச்சரவையில் மூன்று இந்தியர்கள் கோலோச்சுகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ரிஷி சுனக். நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ரிஷி, கேபினெட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் பதவியை வகிப்பது இதுவே முதல்முறை. இங்கிலாந்தில் வசிக்கும் இரண்டாம் தலைமுறை இந்தியர் ரிஷி. தாத்தா, பாட்டி காலத்திலேயே இவர்கள் குடும்பம் இங்கிலாந்தில் குடிபெயர்ந்துவிட்டது. ரிஷி பிறந்ததுகூட இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில்தான்.

நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் ரிஷிக்கு தற்போது ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது. அதுவும் அவரின் மனைவி மற்றும் மாமனார் குடும்பம் மூலமாக. ரிஷியின் மாமனார் இந்தியாவின் பிரபல தொழிலதிபரான 'இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தி ஆவார். ஆம், நாராயணமூர்த்தியின் ஒரே மகளான அக்‌ஷதா மூர்த்தியின் கணவர்தான் ரிஷி. இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

ரிஷிக்கு எழுந்துள்ள சிக்கல் என்ன?!

இதை தெரிந்துகொள்வதற்கு முன்னாள் ரிஷியின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி சொத்து விவரங்களை தெரிந்துள்ள வேண்டியது அவசியம். இன்போசிஸ் நிறுவனத்தின் 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை அக்‌ஷதா வைத்திருக்கிறார். இவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் 4,200 கோடி ஆகும். இது, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நிகர மதிப்பைவிட அதிகம். ராணியின் தனிப்பட்ட செல்வம் சுமார் 3,400 கோடி ரூபாய். இருவரின் சொத்துக்கும் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி வித்தியாசம்.

இந்த விவரங்களை 'தி கார்டியன்' செய்தி நிறுவனம் வெளிக்கொண்டு வந்ததுடன், இன்னும் சில விவரங்களையும் திரட்டியது. இந்தச் சொத்து மதிப்புகள் போக, ஆறு நிறுவனத்தில் அக்‌ஷதா குறிப்பிட்ட அளவு பங்குகள் வைத்துள்ளார். இதில், அமேசான் இந்தியாவுடன் இருக்கும் பங்குகளும் அடக்கம்.

இன்போசிஸ் ஆண்டு அறிக்கையின்படி, அக்‌ஷதா மூர்த்தி 0.91% பங்குகளை வைத்திருக்கிறார். அந்தப் பங்கின் மதிப்புதான் அந்த 4200 கோடி என்று குறிப்பிட்டுள்ள 'தி கார்டியன்', இதனால் ரிஷி சுனக்கிற்கு என்ன சிக்கல் என்பதையும் விவரித்துள்ளது.

இங்கிலாந்து சட்டப்படி, ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றவுடன் அவர்களின் நிதி விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து விவரங்களையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதன்படி, ரிஷி சுனக் தாக்கல் செய்துள்ள நிதி விவரங்களில், அவரின் மனைவி அக்‌ஷதா, தான் நடத்தி வரும் காட்மாரான் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், இன்போசிஸ் நிறுவனத்தில் தன் மனைவிக்கு இருக்கும் சொத்துக்களைப் பற்றி குறிப்பிடவில்லை. இதனை முறைப்படி வெளியிட வேண்டும். இதை ஏன் மறைக்க வேண்டும் என இங்கிலாந்து கட்சிகள் இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளதே சிக்கலுக்கு காரணம்.

இங்கிலாந்து பொது அலுவலக உரிமையாளர்களுக்கான கண்காணிப்புக் குழு முன்னாள் தலைவரான சர் அலிஸ்டர் கிரஹாம், "அரசின் நிதி மற்றும் வணிகக் கொள்கைகளை நிர்ணயிக்கும் சுனக், தன் குடும்பத்தினரின் நிதி நலன்களையும் அறிவிப்பது மிக முக்கியமானது.

இந்த விவகாரத்தில் ரிஷி மிகக் குறைந்த அணுகுமுறையை எடுத்ததாக தெரிகிறது. 'நேர்மை, தலைமைத்துவம்' என்ற இரண்டு கொள்கைகளை அவர் நிறைவேற்றுகிறார் என்பதை உறுதிப்படுத்த ரிஷி சுனக் 'பொது வாழ்க்கையின் ஏழு கொள்கைகளை' கவனமாகப் படிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ஆனால், ரிஷியின் அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர், "பிரதமர் போரிஸ் ஜான்சனின் தனிப்பட்ட ஆலோசகர், அமைச்சர் ரிஷியின் சொத்து தாக்கல் குறித்து அவர் முழுமையாக திருப்தி அடைந்துள்ளார். இதில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கூறியுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனம், இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறது. இன்போசிஸ் இங்கிலாந்து அரசுக்கும் ஒரு ஒப்பந்தக்காரர் என்ற முறையில் பணியாற்றி வருகிறது. இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்காக சில வேலைகளை செய்துவருவதுடன் வைட்ஹாலுடன் ஒரு கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது இன்போசிஸ். இந்நிறுவனம் இங்கிலாந்தில் 10,000 ஊழியர்களைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com