அதிவேக ஆலங்கட்டி மழை... குழந்தைக்காக உயிரைப்பணயம் வைத்த போராளி தாய்!
தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிரைப்பணயம் வைத்த ஆஸ்திரேலிய தாயை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் ஃபியோனா சிம்ப்சன். இவர் தனது குழந்தை மற்றும் பாட்டியுடன் காரில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலையால் கடுமையான மழை பொழிய தொடங்கியது. மழை மட்டுமல்லாமல் அதிவேகத்தில் காற்றும் வீசியுள்ளது. இதனால் காரை இயக்கமுடியாத சிம்ப்சன் சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார். மழையின் தீவிரம் அதிகமாகி ஆலங்கட்டி மழையாக மாறியது. டென்னிஸ் பந்து அளவில் பனிக்கட்டியாக மழை பொழிந்ததில் கண்ணாடி உடைந்து காரும் சேதமடைந்தது.
உடனடியாக பின் சீட்டில் தனியாக இருந்த குழந்தையைப்பற்றி யோசித்த ஃபியோனா குழந்தையின் உடலைச்சுற்றி கவசம் போல மூடி அமர்ந்துவிட்டார். அதிவேக ஆலங்கட்டி மழையால் ஃபியோனா பலத்த காயம் அடைந்தார். வானிலை சீரடைந்த பிறகு வீட்டுக்கு வந்த அவர், சமூக வலைதளங்களில் இது குறித்துப் பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். இனி புயல் சமயங்களில் வெளியே செல்ல மாட்டேன். இனிமேல் அனைவரும் புயல் சமயங்களில் கவனமாக இருங்கள்” எனக் கூறி தான் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் பகிரப்பட்டு வீரத்தாய் என்று சமூக வலைதளங்களில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் ஃபியோனா சிம்ப்சன்.