காணாமல் போன இன்டர்போல் தலைவர் சீனாவில் தடுத்து நிறுத்தம்!
சீனாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இன்டர்போல் தலைவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
இன்டர்போல் என்பது (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும். இது 192 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான்ஸில் அமைந்துள்ளது.
இதன் தலைவராக மெங்க் ஹாங்வே இருக்கிறார். இவரை காணவில்லை என்று இவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனது கணவரை செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை என புகாரில் கூறியிருந்தார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் மெங்க் ஹாங்வே வசித்து வந்துள்ளார். அவர் சீனாவை சேர்ந்தவர். சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அவர் மீது ஏற்கனவே புகார்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் அவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. அவர் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் மீது எந்த வழக்கின் விசாரணை நடைபெறுகிறது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.