‘சண்டைக்கு இப்போ வா’...திடீரென துப்பாக்கியை நீட்டிய நபர் - கூலாக அமர்ந்திருந்த மைக் டைசன்!

‘சண்டைக்கு இப்போ வா’...திடீரென துப்பாக்கியை நீட்டிய நபர் - கூலாக அமர்ந்திருந்த மைக் டைசன்!
‘சண்டைக்கு இப்போ வா’...திடீரென துப்பாக்கியை நீட்டிய நபர் - கூலாக அமர்ந்திருந்த மைக் டைசன்!

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றின்போது, முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசனை நோக்கி மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை நீட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், உலக அளவில் புகழ் பெற்றவர் ஆவார். 1990-களில் ஹெவிவெயிட் குத்துச்சண்டை களத்தில் ஈடு இணையற்ற வீரராக வலம் வந்த இவர், தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை முதல் அல்லது இரண்டாம் சுற்றுகளிலேயே நாக் அவுட் செய்து விடுவதால் சர்வதேச அளவில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர்.

மொத்தம் 58 போட்டிகளில் பங்கேற்று 50-இல் வெற்றி பெற்ற மைக் டைசன், 44 போட்டிகளில் நாக் அவுட் முறையில் எதிராளிகளை வீழ்த்தியிருக்கிறார். தற்போது குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்று விட்ட மைக் டைசன், தனிப்பட்ட முறையில் பல பிஸ்னஸ்களை செய்து வருகிறார். அவருக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் படப்பிடிப்பு அரங்கில் காமெடி ஷோ ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண்பதற்காக மைக் டைசனும் வந்திருந்தார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்த்திராத விதமாக மேடையில் ஏறிய ஒரு நபர், மைக் டைசனை தன்னிடம் சண்டைக்கு வருமாறு அழைத்தார். இதனைக் கண்ட அங்கிருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை திடீரென வெளியே எடுத்தார். இதை பார்த்த அங்கிருந்த அனைவரும் பயத்தில் கூச்சலிட்டனர். பின்னர், அந்த நபர் மைக் டைசனை நோக்கி துப்பாக்கியை நீட்டினார். ஆனால், மைக் டைசனோ எந்தவித சலனமும் இல்லாமல் தனது இருக்கையில் கூலாக அமர்ந்தபடியே இருந்தார்.

சில நொடிகள் அந்த அரங்கமே அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், தான் செய்தது தவறு என உணர்ந்த அந்த நபர், துப்பாக்கியை திரும்ப தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பிறகு மைக் டைசனிடம் மன்னிப்பு கேட்ட அந்த நபர், அவர் அருகே வந்தார். மைக் டைசனும் அவரை ஆரத்தழுவி தட்டிக் கொடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பவுன்சர்களும் அந்த நபரை அங்கிருந்து வெளியே கொண்டு சென்றனர். அவர் காவல்துறையினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் மைக் டைசன் கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும், காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com