மெமரி சிப்புகள் தட்டுப்பாடு.. ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிப்பு!
ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு உலகெங்கும் அசுரவேக வளர்ச்சி கண்டுவருவதன் விளைவாக ஸ்மார்ட்போன்கள் விலை அதிகரித்துவருகிறது. ஸ்மார்ட்போன்களுக்கான மெமரி சிப் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து ஏஐ டேட்டா சென்டர் நிறுவனங்கள் மொத்தமாக சிப்புகளை கொள்முதல் செய்துவிடுகின்றன.
இதனால் ஸ்மார்ட்போன்களுக்கான மெமரி சிப் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை அதிகரித்துவருகிறது. மெமரி சிப் கிடைக்காததால் ஷாவ் மி, ஒப்போ, விவோ ஆகிய 3 சீன நிறுவனங்களும் உற்பத்தியை 30% வரை குறைத்துள்ளன. இதனால், இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விலை கடந்த சில மாதங்களில் 15% வரை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம்கூட மெமரி சிப் தட்டுப்பாட்டால் தனது தயாரிப்புகள் விலையை அதிகரித்திருந்தது. எனினும், சாம்சங் தனக்கான மெமரி சிப்புகளைத் தானே உற்பத்தி செய்வதால் அது சிக்கலில் இருந்து தப்பிவிடுகிறது. பிற நிறுவனங்கள் மெமரி சிப்புகள் திறனைக் குறைப்பது, முந்தைய தொகுப்பு சிப்புகளையே பயன்படுத்துவது, கேமரா பிக்சல் அளவு குறைப்பு போன்ற வழிகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மெமரி சிப் தட்டுப்பாடு அடுத்தாண்டு இறுதிவரை நீடிக்க வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

