World Press Photo 2025 Award |இஸ்ரேல் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் படம் தேர்வு!
2025ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படத்திற்கான விருதை, ’நியூயார்க் டைம்ஸ்’ இதழுக்கான புகைப்படக் கலைஞரான சமர் அபு எலூஃப் பெற்றுள்ளார். இவர், கத்தாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன புகைப்படக் கலைஞர் ஆவார். இஸ்ரேல் தாக்குதலில், அவர் எடுத்த இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 9 வயது சிறுவனான மஹ்மூத் அஜ்ஜோர் இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கைகள் இன்றி இருப்பது அந்தப் புகைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மார்ச் 2024இல் இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில், மஹ்மூத்தின் ஒரு கை துண்டிக்கப்பட்டதாகவும், மறு கை சிதைந்ததாகவும் World Press Photo அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புகைப்படக் கலைஞர் அபு எலூஃப் தெரிவித்ததாக World Press Photo அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர், "மஹ்மூத்தின் தாயார் எனக்கு விளக்கிய மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. மஹ்மூத் தனது கைகள் துண்டிக்கப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தபோது, அவன் அவரிடம் சொன்ன முதல் வாக்கியம், 'நான் உன்னை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?' என்பதுதான்" என்று குறிப்பிட்டதாக அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து World Press Photo நிர்வாக இயக்குநர் ஜூமனா எல் ஜெய்ன் கௌரி, “இது சத்தமாகப் பேசும் ஓர் அமைதியான புகைப்படம். இது ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது. ஆனால், தலைமுறைகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பரந்த போரின் கதையையும் சொல்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்கள் 59,320 புகைப்படங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இதில், 68வது World Press Photo போட்டியின் வெற்றியாளராக மர் அபு எலூஃப் தேர்வு செய்யப்பட்டார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும் இரண்டாம்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால், அங்கு தற்போது மீண்டும் போர் நடைபெற்று வருகிறது. இதில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.