கோலாலம்பூர் விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நம்மின் உடற் கூராய்வு நிறைவு பெற்றதாக மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை மலேசியா காவல்துறையிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரரான கிம் ஜாங் நம், கடந்த 13-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். வி.எக்ஸ். என்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நஞ்சு மூலம் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடல் கூராய்வில் இது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் சதாசிவம் கூறியுள்ளார். தற்போது அரசு முன் உள்ள ஒரே சவால், கொல்லப்பட்டவர் கிம் என்பதை மரபணு பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது ஒன்றே என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வி.எக்ஸ். ரசயானம் வீசப்பட்டதால், 20 நிமிடங்களுக்குள் கிம் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கிம் படுகொலை தொடர்பாக வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.