கேரள நர்சு விவகாரம்.. பணத்தை அபேஸ் செய்த சமூக சேவகர்.. உயிரிழந்த ஏமன் சகோதரர் குற்றச்சாட்டு!
கேரள நர்சு விவகாரம்: பேச்சுவார்த்தையில் தண்டனை நிறுத்தம்
ஏமனைச் சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த மரண தண்டனையை தடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜூலை 16ஆம் தேதி, அந்த தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. எனினும் அதற்கு முன்பாக, கேரளாவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் உத்தரவின் பேரில், ஏமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸ், தலால் அபு மஹதி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, நிமிஷாவின் தண்டனை தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தலால் அபு மஹதி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி, '’நிமிஷா தரப்பின் இழப்பீடு பணத்தை ஏற்கப் போவதில்லை எனவும், அவருக்கு மரண தண்டனை உறுதி” எனவும் தெரிவித்திருந்தார். நீதியைவிட தாங்கள் பணத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாக இந்திய ஊடக அறிக்கைகள் சுட்டிக் காட்டியதை அடுத்து மஹதியின் சகோதரர் கோபமடைந்திருப்பதாக என கேரள செவிலியரை வீட்டிற்கு அழைத்து வரப் போராடும் ஏமனில் உள்ள சமூகச் சேவகர் சாமுவேல் ஜெரோம் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த ஏமன் சகோதரர் குற்றச்சாட்டு
இந்த நிலையில், சமூகச் சேவகர் சாமுவேல் ஜெரோம் மீதே தலால் அபு மஹதி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி புகார் தெரிவித்திருப்பது இந்த வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ”நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற வசூலித்த பணத்தை சாமுவேல் ஜெரோம் தவறாகப் பயன்படுத்தினார். ஜெரோம் தன்னை ஒரு வழக்கறிஞராக தவறாகக் குறிப்பிட்டு, ஏமனில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உடன் தொடர்பு இல்லாமல், நிதி திரட்டினார். அவர் 40 ஆயிரம் டாலர் உட்பட திரட்டப்பட்ட நிதியை அபகரித்துக் கொண்டார். ஏமன் அதிபர், நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனைக்கு ஒப்புதல் அளித்தபிறகு, நான் சாமுவேல் ஜெரோமைச் சந்தித்தேன். அவர் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்று ’வாழ்த்துகள்’ என்று கூறினார். உயிரிழப்பில் சிந்திய ரத்தத்தை மத்தியஸ்தம் என்ற பெயரில் ஜெரோம் வர்த்தகம் செய்தார். அவர் தனது வக்கிர செயலை நிறுத்தவில்லை என்றால் உண்மை வெளிப்படும்” என எச்சரித்துள்ளார்.
கவுன்சிலில் இருந்து விலகிய சாமுவேல் ஜெரோம்
இதற்கிடையில், நிமிஷா பிரியா வழக்கில் இடைத்தரகராக இருந்த ஜெரோம் என்பவரை சர்வதேச செயல்பாட்டு கவுன்சில் வெளியேற்றியுள்ளது. கவுன்சிலின் சட்ட ஆலோசகரான சுபாஷ் சந்திரன் கே.ஆரின் கூற்றுப்படி, ”ஜெரோம் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி, தூதரகம் மூலம் 20,000 டாலர் பெற்ற ஒருநாளுக்குப் பிறகு குழுவிலிருந்து வெளியேறினார். கவுன்சில் அவரது நடவடிக்கைகளை கேள்வி கேட்கத் தொடங்கிய பின்னரே ஜெரோமின் வெளியறத் தொடங்கினார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய சில நபர்களால் ஏற்பட்ட துயரத்திற்காக தலால் மஹ்தியின் குடும்பத்தினரிடம் கவுன்சில் மன்னிப்பு கேட்டது. நிமிஷா பிரியா மற்றும் தலால் மஹ்தியின் குடும்பங்கள் இருவரும் தவறாக வழிநடத்தப்பட்டு ஏமாற்றப்பட்டதாக சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எம்.எல்.ஏ சாண்டி உம்மன் கோழிக்கோட்டில் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரை சந்தித்து, பிரியாவின் மரணதண்டனை நிறுத்திவைக்க வழிவகுத்த அவரது தலையீட்டிற்கு நன்றி தெரிவித்தார். நிமிஷா பிரியாவின் பாதுகாப்பான விடுதலைக்கான தனது முயற்சிகளைத் தொடருமாறு உம்மன், அபூபக்கர் முஸ்லியாரை வலியுறுத்தினார்.
தலையிட்ட முஸ்லியார்.. விமர்சித்த சமூக வலைதளங்கள்!
மறுபுறம், முஸ்லியாரின் தலையீட்டிற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு எதிராகவும் போர் வெடித்துள்ளது. கேரளாவில் உள்ள அரை டஜன் முஸ்லிம் சமூக அடிப்படையிலான குழுக்களில் ஒன்றான முஸ்லியார் தலைமையிலான ஏபி குழுவுடன் இணைந்திருக்கும் சிபிஎம், அவரை வெகுவாகப் பாராட்டியது. அக்குழுவைச் சேர்ந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் "காந்தபுரம் முஸ்லியார் செய்த காரியங்களுக்கு எவ்வளவு பாராட்டுகள் சொன்னாலும் போதாது. அவர் உண்மையிலேயே அனைவருக்கும் பிடித்த முஸ்லியாராகிவிட்டார்" என்றார். முஸ்லியாரின் மனிதாபிமான முயற்சிகளையும் கேரளாவின் மதச்சார்பற்ற விழுமியங்களையும் கோவிந்தன் எடுத்துரைத்தார். ஆனால், இது சமூக ஊடகங்களில் விமர்சனத்தைத் தூண்டியது. பயனர் ஒருவர், ”இது இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளை மறைத்துவிட்டது. ஒரு நாட்டின் ராஜதந்திரத்தைவிட ஒரு மதப் பிரமுகர் அதிக ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதுபோல, கேரள ஊடகங்கள் மதத் தலைவர் காந்தபுரத்தைப் புகழ்ந்து பேசுகின்றன. என்ன முட்டாள்தனம்" என விமர்சித்தார்.
இந்தப் பதவி மேலும் விமர்சமான நிலையில், ’முஸ்லியாரின் பங்கு குறித்து பகிர்ந்துகொள்ள எந்த தகவலும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "நீங்கள் குறிப்பிட்டுள்ள நிறுவனத்தின் பங்கு (முஸ்லியார்) குறித்து, இந்தக் கணக்கில் பகிர்ந்துகொள்ள எனக்கு எந்த தகவலும் இல்லை. இஃது ஓர் உணர்ச்சிகரமான விஷயம். இந்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்தப் பிரச்னையை தீர்க்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் நட்பு அரசாங்கங்களுடனும் பேசி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ”நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதில் எந்த மதத் தலைவரும் ஈடுபடவில்லை” என சாமுவேல் ஜெரோமும் கூறியுள்ளார்.