ஜஸ்டின் பீபர் நம்பிக்கைக்குரியவராக இல்லை: சீன அரசு விளக்கம்
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சிக்கு சீன அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், ஜஸ்டின் பீபர் நம்பிக்கைக்குரியவர் இல்லை என தெரிவித்துள்ளது.
கனடாவை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (23). இவர் சிறு வயதிலேயே பாப் உலகில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார். உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய அவர், இந்த ஆண்டு இசை நிகழ்ச்சியை சீனாவில் நடத்த அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரினார். ஆனால் இவர் இசை நிகழ்ச்சி நடத்த சீன அரசு அனுமதி அளிக்கவில்லை.
இது குறித்து சீனாவின் பெய்ஜிங் நகராட்சி கலாசார மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "ஜஸ்டின் பீபர் நம்பிக்கைக்குரியவராக இல்லை. கடந்த முறை சீனாவில் இசை நிகழ்ச்சி நடத்திய போது அவரது நடவடிக்கைகள் கெட்ட நடத்தையுடன் இருந்தன. எனவே அவர் மக்கள் விரும்பும் வகையில் பாடல் வரிகளை உருவாக்கி தன்னை மேம்படுத்தி கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது இசை நிகழ்ச்சியில் தங்களது இதயம் இயற்கைக்கு மாறாக வேகமாக துடித்ததாகவும், மீண்டும் சீனாவில் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டாம் என அரசு இணையதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி கோவிலில் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி நடத்தினார். 2-ம் உலகப் போரில் பலியான லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு சர்ச்சைகள் சீனாவில் உருவாகியது குறிப்பிடத்தக்கது.