நாடாளுமன்ற கீழவை கலைப்பு: தேர்தலுக்கு தயாராகும் ஜப்பான்
ஜப்பானில் அக்டோபரில் 465 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற கீழவையை அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே கலைத்துள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே அக்டோபர் 22ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று முறைப்படி நாடாளுமன்றத்தை கலைத்தார். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட, உறுப்பினர்கள் அனைவரும் பன்சாய் என மூன்று முறை கூறி அதை வரவேற்றனர்.
வடகொரியாவுடன் பதற்றமான சூழல் நிலவும் காலகட்டத்தில் அரசியல் வெறுமையை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற கீழவையை கலைத்ததை கண்டித்து பல எதிர்க்கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் அவையை புறக்கணித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது ஆதரவளர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் காரணமாக பிரதமர் ஷின்சோ அபேவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு 30 சதவீதமாக குறைந்திருந்தது. ஆனால் தற்போது வடகொரியாவுக்கு எதிராக அவர் எடுத்துள்ள கடுமையான நிலைபாட்டால் அது 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவே அவர் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கடந்த 2012ம் ஆண்டு பதவிக்கு வந்த அபேவுக்கு கடந்த வாரம் புதன்கிழமை புதிய கட்சி தொடங்கிய டோக்கியோ ஆளுநர் யுரிகோ கொய்கே பெரும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களிலேயே யுரிகோவின் கட்சிக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. நம்பிக்கையின் கட்சி என பெயரிடப்பட்டுள்ள அவரது கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக கணிசமான மக்கள் கருத்துக்கணிப்புகளில் தெரிவித்திருப்பது அபேவுக்கு பின்னடைவாக அமையும் என தெரிகிறது. புதிய கட்சியின் வரவு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஜனநாயக கட்சிக்கும் பின்னடைவாக அமைந்துள்ளது. முக்கிய தலைவர்கள் பலரும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கை கட்சிக்கு தாவி வருவதால் தமது கட்சி வேட்பாளர்களை நம்பிக்கை கட்சியின் கீழ் போட்டியிட அனுமதிப்பது குறித்து ஜனநாயக கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
கொள்கை ரீதியாக பிரதமர் அபே அடுத்த ஆண்டு விற்பனை வரியை எட்டு சதவீதமாக உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இதற்கு யுரிகோ கொய்கே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அபேவின் கட்சி அணுமின்சார உற்பத்தியை தொடர திட்டமிட்டுள்ளது. ஆனால் கொய்கேவின் கட்சி அணு உலைகளை மூடவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.