ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
பதிவான 6.7 ரிக்டர் நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இன்று காலை 11:44 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், ஹொக்கைடோ கடற்கரைப் பகுதிகள் மற்றும் ஆமோரி, இவாடே, மியாகி மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி அட்வைசரி விடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நிலநடுக்கத்திற்குப் பிறகு, இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, ஷிண்டோ 1-ஐ தாண்டிய 31 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில், ஒரு வார காலத்திற்குள் பெரிய நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
6,000 மக்கள் வெளியேற்றம்
ஜப்பான் அதிகாரிகள் கிழக்கு கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்து, அலைகள் அதிகபட்சம் 1 மீட்டர் (3.3 அடி) உயரம் வரக்கூடும் என எச்சரித்தனர். பின்னர் ஆமோரி மற்றும் ஹொக்கைடோ பிரஃபெக்சர்களில் 20 செ.மீ உயரம் கொண்ட அலைகள் பதிவான நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பானின் NERV அவசர எச்சரிக்கை செயலி மூலம் 6,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது.
JMA விடுத்த எச்சரிக்கை
ஜப்பான் அதிகாரிகள் வெளியிட்ட சுனாமி ஆலோசனையில் (tsunami advisory) — இது அலைகள் 1 மீட்டர் (3.3 அடி) உயரம் வரை எட்டக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையின்கீழ், மக்கள் நீர்நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) வழங்கும் மூன்று நிலை கொண்ட சுனாமி எச்சரிக்கை முறைகளில் குறைந்தபட்ச நிலை ஆகும்.
அதற்கு ஒரு நிலை மேலானது சுனாமி எச்சரிக்கை (tsunami warning). இதில் அதிகாரிகள் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழலாம் என்றும், தாழ்வான கடற்கரைப் பகுதிகளில் சேதம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும்.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பிரதமர் வலியுறுத்தல்
ஜப்பான் பிரதமர் சனே தகேய்ச்சி இதுகுறித்து தற்போது தெரிவித்ததாவது; 'இந்த நிலநடுக்கம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அதிகாரிகள் வெளியிட்ட மேகா குவேக் எச்சரிக்கை வரம்பிற்குள் வருவதில்லை,
முன்பே தெரிவித்ததுபோல், டிசம்பர் 8 ஆம் தேதி வடகிழக்கு ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்னும் பெரிய அதிர்வு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் மக்கள் இன்றும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வெளியேற்ற வழித்தடங்களையும் அவசர காலப் பொருட்களையும் சரிபார்த்து வைத்திருக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார் .
