ரோமில் புத்தாண்டு நாளன்று இரவில், பறவைகள் சாலையில் இறந்து கிடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்தாலியரான டியாகோ ஃபெனிச்சியா புது வருட நாளன்று அதிகாலையில் ரோம் நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டு உள்ளார். "நண்பர்களே, நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிந்து கிடக்கின்றன. இதை பார்ப்பதற்கு சங்கடமாகவும், நம்ப முடியாததுமாக உள்ளது. நாம் வெடித்து பட்டாசுகளே இதற்கு காரணம்’’ என டியாகோ ஃபெனிச்சியா வேதனை தெரிவித்தார்.
இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச விலங்கு பாதுகாப்பு அமைப்பு (OIPA), பறவைகள் இறப்புக்கு பட்டாசுகளே காரணம். அவைகள் அதிக பட்டாசு சத்தத்தால் பயந்து இறந்திருக்கலாம். திடீரென்று பட்டாசு வெடிக்கும்போது பறந்து கொண்டிருக்கும் பறவைகள் சத்தத்தில் நிலைகுலைந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்; சுவர்கள், ஜன்னல்கள், மின் இணைப்புகளில் மோதிவிடும்; மாரடைப்பால் கூட இறந்து போகக்கூடும்’’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
டிசம்பர் 31 முதல் ஜனவரி 6-ம் தேதி வரை ரோம் நகரில் பட்டாசு வெடிப்பதற்கு மேயர் தடை விதித்திருந்த நிலையில், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.