மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா குடியுரிமைத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
உலகளவில் இயங்கி வரும் கார்ப்பரேட் கம்பெனிகளில் மிக முக்கியமான நிறுவனம் மைக்ரோசாஃப்ட். அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தனது கருத்துகளை முன்வைத்துள்ளார். நேற்று நியூயார்க்கிலுள்ள மன்ஹாட்டன் நகரத்தில் நடைபெற்ற அதிகாரிகளிடையேயான கூட்டத்தில் பங்கேற்ற அவர், பல விஷயங்கள் குறித்து பேசினார்.
“என்ன நடக்கிறது என்பதை குறித்து நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது மிக மோசமானது. வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்து மிகப்பெரிய சாதனையாளராகவோ அல்லது இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாகவோ வரவுள்ள ஒருவரை நான் காண விரும்புகிறேன்” என்று மைக்ரோசாஃப்ட் அதிகாரி நாதெல்லா கூறியதாக buzzfeed news நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பென் ஸ்மித் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் இந்தியா சார்பாக நாதெல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “ஒவ்வொரு நாடும் அதன் எல்லைகளை வரையறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும். இதற்கேற்ப குடியேற்றக் கொள்கையை அமைக்கும். ஜனநாயக நாடுகளில், இது மக்களுக்கும் அவர்களது அரசாங்கங்களும் சேர்ந்து அந்த எல்லைகளை விவாதித்து வரையறுக்க வேண்டிய ஒன்று.
நான் எனது இந்திய பாரம்பரியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளேன். பல கலாச்சாரங்கள் நிலவும் இந்தியாவில் வளர்ந்து வளர்ந்துள்ளேன். மேலும் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த அனுபவமும் எனக்கு உள்ளது. புலம்பெயர்ந்த ஒருவர் ஒரு வளமான தொடக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். அல்லது இந்திய சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருமளவில் பயனளிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்த விரும்பும் இந்தியனாக இருப்பதே எனது நம்பிக்கை” என கூறியுள்ளார்.
சத்யா நாதெல்லா, ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பிப்ரவரி 2014 முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ-க்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் தொடர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.