”ஈரானின் உச்சத்தலைவர் கொலை செய்யப்பட வேண்டியவர்..” குறிவைக்கும் இஸ்ரேல்?
ஈரானுடனான போர், நாளைகூட தொடங்கக்கூடும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மொஜ்தபா கமேனி 'கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில்' உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் ; m. மீரா
இஸ்ரேலும் லெபனானில் இருக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவும் அக்டோபர் 2023 முதல் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. பல மாதங்களாக நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஜூன் 26 அன்று போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire Agreement) முடிவானது. இந்த ஒப்பந்தத்தில் தெற்கு லெபனானின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், அதேவேளையில் லெபனான் இராணுவம் அங்கு நிற்பதற்கும் ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தின் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி லெபனான் தலைநகரில் ஈரானின் ஆதரவு பெற்ற 'ஹிஸ்புல்லா' அமைப்பின் கொடிகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குp பின்னரும் இஸ்ரேலும் லெபனானும் மாறிமாறி தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”ஈரானுடனான மோதல் மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு சாத்தியமான சூழல்கள் இருக்கிறது. ஒன்று, பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கருதி ட்ரம்ப் மீண்டும் தாக்குதல் நடத்தும் முடிவை எடுப்பதாகும். மற்றொன்று ஈரான் நம் மீது தாக்குதல் நடத்துவதாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவினால், இஸ்ரேல் வலுவாகத் தாக்கும் என்றும் இரண்டு நாட்களுக்குள்கூட இஸ்ரேல் ஈரானுடனான போர் துவங்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். ஈரானுடனான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தூதரக முயற்சிகளை இஸ்ரேல் சீர்குலைக்க விரும்பவில்லை என்றும், ஆனால் எந்தவொரு தாக்குதலுக்கும் வலுவாகப் பதிலடி கொடுக்கும் என்றும் கூறினார். மேலும் ஈரானின் உச்சத் தலைவர் (Supreme Leader) மொஜ்தபா கமேனி குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் (marked for death) இருப்பதாகவும் காட்ஸ் கூறியுள்ளார்.

