இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் 2009-ஆம் ஆண்டு முதல் பிரதமர் பதவியில் இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவர் நண்பர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருள்களைப் பரிசாகப் பெற்றதாகவும், அந்நாட்டு நாளிதழ்களில் தனக்கு சாதகமாக செய்திகளை பிரசுரிக்கச் செய்வதற்காக வர்த்தக உதவிகள் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் என 3 மிகப்பெரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார். இஸ்ரேலில் பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.