இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 150 ராக்கெட்களை ஏவி ஹமாஸ் அமைப்பினரும் தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். இதற்கிடையே, காஸா பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேல் ராணுவம் அங்கு உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் துண்டித்து நகரை இருளில் ஆழ்த்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட முடியாமல் மருந்துப்பொருட்கள் கிடைக்கப் பெறாமலும் காசா அவதிப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் ஹமாஸும் இஸ்ரேல் மீது திருப்பி தாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று, இஸ்ரேல் குடியிருப்புகளின் மீது ஹமாஸ் 150 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.