மீண்டு வருகிறதா ஐஎஸ்?: எச்சரிக்கை விடுக்கும் உளவுத்துறையினர்!

மீண்டு வருகிறதா ஐஎஸ்?: எச்சரிக்கை விடுக்கும் உளவுத்துறையினர்!
மீண்டு வருகிறதா ஐஎஸ்?:  எச்சரிக்கை விடுக்கும் உளவுத்துறையினர்!

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அழிந்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு மீண்டும் ஈராக்கில் உயிர்த்தெழுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிகவும் ஆபத்தான ஒரு பயங்கரவாத அமைப்பு ஐஎஸ் என அழைக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பு. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதில் கைதேர்ந்த இந்த அமைப்பு ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பறித்துள்ளது. 2014ஆம் ஆண்டு சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தது.

பின்னர் பல்வேறு நாடுகளின் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கம் குறைந்து வந்தது. சமீபத்தில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி கொல்லப்பட்டார் என அமெரிக்கா அறிவித்தது. இதனால் அந்த அமைப்பு படிப்படியாக அழிந்து விடும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறின. ஆனால் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கில் மீண்டும் உயிர்த்தெழ தொடங்கி இருப்பதாக குர்து படையினர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, ஈராக்கின் மலைப்பிரதேசங்களில் ஐஎஸ் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகள் முன்பை விட திறன் வாய்ந்தவர்களாகவும் தொழில்நுட்ப அறிவு மிகுந்தவர்களாகவும் உள்ளனர். அல்கய்தாவைவிட ஆபத்தானவர்களாக இவர்கள் வடிவம் பெற்றுள்ளனர் என குர்துக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்பை அதிக நிதி இவர்களிடம் இருப்பதாகவும் அதனைக் கொண்டு நவீன ஆயுதங்களை வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைய நிலையில் ஐஎஸ் பய்ங்கரவாதிகளை அழித்தொழிப்பது மிக கடினம் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மறைவான இடங்கள் நிறைந்த ஈராக்கின் மலைப்பகுதிகளில் பலர்பயிற்சி பெற்று வருவது தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த பயங்கரவாதிகள் மிகத் தீவிரமாக இயங்கத் தொடங்குவார்கள் என சொல்லப்படுகிறது.

ஈராக் படையினருக்கும், குர்து படையினருக்கும் இடையே ஒற்றுமை இல்லாமல் போனது, ஈராக்கில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை உள்ளிட்டவை பயங்கரவாதிகள் மீண்டு வர காரணமாக அமைந்துள்ளது. அது தவிர ஈராக் அரசு மீது அதிருப்தி தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில் ஈராக்கில் மட்டும் சுமார் 5000 பயங்கரவாதிகள் இருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஈராக்கிற்கான பிரச்னை மட்டுமே அல்ல, ஐஎஸ் அமைப்பு மீண்டு வருவது உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com