ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் டல் அஃபார் நகரில் இருந்து அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்தாதி கொல்லப்பட்டதை சிரிய போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் அமைப்பும் உறுதி செய்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை அமெரிக்க ஆதரவுடன் போரில் ஈடுபட்டுள்ள ஈராக் படைகள் முழுமையாக மீட்டதாக அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி திங்கள்கிழமை அறிவித்தார். ஐஎஸ் அமைப்பின் தலைமையகம் போல் செயல்பட்ட மொசூல் நகரை 9 மாத கடும் போருக்குப் பின்னர் ஈராக் அரசுப் படைகள் கைப்பற்றின. அந்த தாக்குதலின் போது பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.