அமெரிக்காவை அச்சுறுத்தும் இர்மா புயல்: முன்னேற்பாடுகள் தீவிரம்
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள இர்மா புயல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் தீவு பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல் தாக்கும்போது மணிக்கு 295 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு லீவார்டு தீவுகளுக்கும், கிழக்கு போர்டோரிக்காவுக்கும் இடையே இர்மா புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட ஹார்வீ புயல் மற்றும் வெள்ளத்தால் 12 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் இன்னும் விலகாத நிலையில் தற்போது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது மக்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.